ஈரோடு, மார்ச் 14: ஈரோடு திண்டல் காரப்பாறையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் முத்துசாமி உறுதியளித்தார். ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமி நேற்று திண்டல் காரப்பாறை பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேரித்தார். அப்போது வேட்பாளர் முத்துசாமிக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த மக்களிடம் வேட்பாளர் முத்துசாமி பேசியதாவது: திண்டல் காரப்பாறை பகுதியானது மாநகராட்சி எல்லைக்குள் இருந்தபோதிலும் அடிப்படை வசதிகள் என்பது மிகவும் குறைவாக உள்ளது. சாலை, சாக்கடை, குடிநீர், தெருவிளக்குகள், தனிநபர் இல்லக்கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதே போல போக்குவரத்து வசதி என்பதும் மிகவும் குறைவாக உள்ளது.
எனவே ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு பொதுமக்கள் வந்து செல்ல மினி பஸ்கள் அல்லது அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்படும். பின்தங்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்கள் பொருளாதார ரீதியான முன்னேற்ற வேலைவாய்ப்பு, சுய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளது. எனவே தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மலர வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். எனவே உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.